உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட கவரிங் நாயணயத்தை கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்.. மீளா அதிர்ச்சியில் வாக்காளர்கள்!
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கவரிங்கால் செய்யப்பட்ட போலி தங்க நாணயத்தை வாக்காளர்களுக்குப் பரிசாகக் கொடுத்து ஏமாற்றியிருக்கிறார் ஒரு வேட்பாளர்.
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஊரகப் பகுதிகளில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசினார்கள். பல இடங்களில் தேர்தல் ஆணையம், காவல் துறையினரையும் கெடுபிடிகளையும் தாண்டி பரிசு பொருட்கள், பணம் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் வழங்கினர்.
இந்நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 9 அன்று தேர்தல் நடைபெற்றது. வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்ட வேட்பாளர் ஒருவர், அதற்குப் பரிசாக தங்க நாணயங்களையும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்படி தங்க நாணயத்தைப் பரிசாக பெற்ற வாக்காளர்கள் சிலர், அதை அடகு வைக்க சென்றபோது அவை தங்கம் அல்ல, கவரிங்கால் செய்யப்பட்ட நாணயம் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனால், ஆசையாக சென்ற் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தேர்தலுக்கு முன்பே கவரிங் நாணயத்தைக் கொடுத்திருந்தால், முன்பே தெரிந்துவிடும் என்பதால், தேர்தல் நாளன்று கவரிங் நாணயத்தை அந்த வேட்பாளர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த வேட்பாளர், பிரதான கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டதாகவும், கவரிங் நாணயம் விவகாரம் தற்போது தெரிய வந்திருப்பதாலும், அங்கு மறுதேர்த நடத்தக்கோரி மற்ற வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.