தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து? இன்று முக்கிய முடிவை வெளியிடுகிறார் முதல்வர் எடப்பாடி?
தமிழகத்தில் இபாஸ் அனுமதியை தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் இபாஸ் அனுமதியை தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதியிலிருந்து கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. மே மாத இறுதி வரை பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 கட்ட தளர்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ- பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் பல்வேறு மாநில அரசுகள் கெடுபிடிகள் விதித்து வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தது. இதனையடுத்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதினார்.
அதில், மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்துக்குத் தடை விதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக, தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இணையவழி அனுமதி சீட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இ -பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா? வேண்டாமா? என்று குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் இபாஸ் முறை தொடா்பாக முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இ-பாஸை ரத்து செய்தால் கொரோனா தடுப்பு என்பது சவாலாகி விடும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.