ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இந்தச் செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. தங்கள் வாக்கைப் பதிவு செய்ய வந்த மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சிட் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்ததாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டி வருகிறது. இதைக் கண்டித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அக்கட்சியினர் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் இதுதொடர்பாக ட்விட்டர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன. அனைத்து வார்டுகளிலும் பணமும் பரிசுப் பொருட்களும் விநியோகம் ஆனது. வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் பணம் அளித்து வரவழைக்கப்பட்டார்கள்.

வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பிரச்சாரத்திற்குச் செல்லும்போது அடித்து விரட்டப்பட்டார்கள். தேர்தல் நாளில் வாக்குச் சாவடியிலே பணம் விநியோகம் செய்யப்பட்டது. உச்சகட்ட அநீதியாக வாக்குச்சாவடிகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இந்தச் செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. தங்கள் வாக்கைப் பதிவு செய்ய வந்த மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை.

உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிடத் துடிக்கும் கழகங்களில் ஊழல் வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது. தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும்” என்று அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
