கொங்கு மண்டலத்தை வழிநடத்த வாங்க... கோவையில் சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டி வரவேற்பு..!
கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாருங்கள் என்று சசிகலாவுக்கு ஆதரவாக கோயம்முத்தூர் நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தினந்தோறும் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். கட்சித் தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் பொதுவெளியில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதிமுகவை தன் பக்கம் வரும், 2026-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியை அமைப்போம் என்று சசிகலா பேசும் பேச்சால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனைப் பார்க்க அதிமுக கொடியுடன் வந்திருக்கிறங்கினார் சசிகலா.
இந்நிலையில் அமமுக சார்பில் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சசிகலா புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டிகளில், ‘கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாரீர்’ என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.