4 ஆவது நாளாக நீடிக்கும் பஸ் ஸ்ட்ரைக் ….. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு திட்டம் !
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 4 ஆவது நாளாக நீடிக்கிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
தி.மு.க. சிஐடியூ உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே ஓடுவதால் அவற்றில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரு சில தனியார் பேருந்துகளும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வேலைநிறுத்தத்துக்கு எதிராக இந்திய மக்கள் மன்ற தலைவர் வராகி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் , போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்ததோடு, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங் கள் உச்சநிநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துவிட்டனர். வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்றும், நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். மேலும் நாளை முதல் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் தொழிலாளர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து போக்கு வரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடிக்கிறது. இதனால் . மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடுகின்றன. பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்காததால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை கோயம்பேடு, பாரிமுனை பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பணிமனைகளில் இருந்து குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.
இதனால் உரிய நேரத்துக்கு பஸ் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை அறிந்து, குறைவான பயணிகளே பஸ் நிலையங்களுக்கு வந்தனர். இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பஸ்கள் ஓடாததால் மின்சார ரெயில்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பல இடங்களில் தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களிடம் இருந்து உரிய பதில் வராவிட்டாலோ அல்லது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாலோ அவர்களை டிஸ்மிஸ் செய்யவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.