நள்ளிரவில் திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்திய அரசு…. குறைந்த பட்சம் 2 ரூபாயும் அதிக பட்சம் 4 ரூபாயும் அதிகரிப்பு…. பொது மக்கள் அதிர்ச்சி !!
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று நள்ளிரவு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறைந்த பட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து 14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி பேருந்து கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக, இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடட்டண உயர்வைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தின.
கடுமையான போராட்டங்களையடுத்து பேருந்து கட்டணத்தை 1 ரூபாய் குறைத்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் நள்ளிரவு முதல் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் மாநில அரசுக்கு தனியாக பஸ் போக்குவரத்து கழகம் இருந்தாலும் இங்கு குறைவான பஸ்களே உள்ளன. இந்த பஸ்கள் பெரும்பாலும் புதுவை மாநிலத்துக்குள்ளேயே இயக்கப்படுகிறது.
புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்களே அதிக அளவில் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோதே, புதுச்சேரியிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது ஆளுநர் அனுமதியுடன் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி குறைந்த பட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து 14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அத்காரிகள் தெரிவித்துள்ளனர்.