பட்ஜெட் திட்டமிட்டபடி தாக்கல் - அனைத்து கட்சிகள் சம்மதம்
இ.அஹமது மறைவை ஒட்டி இன்று பட்ஜெட் தாக்கல் செய்வது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்விக்கு அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அடிப்படையில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. முதன் முறையாக ரயில்வே பட்ஜெட்டும் , பொது பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான வேலைகள் கடந்த பல வாரங்களாக நடந்து வந்த வேலையில் பட்ஜெட்டுக்கு முந்தைய குடியரசு தலைவர் உரை நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான் கேரள எம்.பி.இ.அஹமது மயங்கி விழுந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். எம்.பி. மரணமடைந்ததால் அவை மரபுப்படி அஞ்சலி செலுத்தி அவையை ஒத்திவைக்க வேண்டும்.
ஆனால்பட்ஜெட் நடைமுறை என்பது சிக்கலானது. இந்தியா முழுதுக்குமான பட்ஜெட் திடீரென அதன் நடைமுறைகளை மாற்ற முடியாது . இதனால் அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்வது உறுதியாகி உள்ளது.
காலை 11 மணிக்கு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதற்கு முன்னர் இ.அஹமது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.