முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்குறாங்க...! மாறி மாறி தெறிக்கவிடும் குஷ்பு!
தமிழகத்தில் ஓட்டை உடைசல் பேருந்துகள்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றும் இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள் என்றும் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
2018-19 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் குறித்து நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறும்போது, இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என்றும் பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்றும் கூறினார்.
தூத்துக்குடியில் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வந்த குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இனி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இதுவே கடைசி பட்ஜெட்டாக இருக்கும். இந்த பட்ஜெட்டால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களை மாற்றி பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். இது ஊழல் இல்லாத அரசு என்று கூறுகின்றனர். பாஜக ஆட்சியில் செய்த ஊழலை மூடி மறைக்கின்றனர். ஊழல் இல்லாத அரசு என்றால் ராஜஸ்தானில் ஜெயித்திருக்க வேண்டுமே.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது போல மத்திய அரசின் இந்த பட்ஜெட்டால் எந்த வகையிலும் வளர்ச்சி ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்தார்.
நாட்டில் பாலியல் கொடுமைக்கு எதிராக வழங்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். 8 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என்றும் குஷ்பு கூறினார்.
தமிழகத்தில் பேருந்துகள் எதுவுமே சரியில்லை. ஓட்டை உடைசல் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தை
உயர்த்தியிருக்கிறார்கள். பேருந்து கட்டணத்தை பைசாவில் குறைத்திருக்கிறார்கள். இவ்வாறு குஷ்பு பேசினார்.