தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை புதுச்சேரியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று தமிழக அரசு புதிதாக சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவின் பேரில் புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு முகாம் நடைபெற்றது. அதில் ஓட்டல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் நாளை முதல் அமலுக்கு வர உள்ள புதிய கட்டுப்பாடுகள் : 

புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; அணியாவிடில் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் 

திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி 

ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி 

திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். 

புதுச்சேரியில் உள்ள கோவில்கள் அனைத்தும் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம். 

பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க கூடாது

இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை கடும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஒன்று கூடி விழாக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.