பாஜக-அதிமுக நாடகமா..? திமுகவை நாட திட்டமா..? கியாரே செட்டிங்கா..?
“எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அதுதான் அவரது ஆசை என்றால் அதனை அரசு நிறைவேற்றும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து நடத்தும் நாடகம் போல் தோன்றுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அதுதான் அவரது ஆசை என்றால் அதனை அரசு நிறைவேற்றும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து நடத்தும் நாடகம் போல் தோன்றுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபக நாட்களாக பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “அதிமுகவில் அண்ணாவின் படத்தையும், பெரியார் படத்தையும் நீக்கிவிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று கட்சி பெயரை மாற்றி அரசியல் செய்தால் தமிழகத்தில் அதிமுகவிற்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாவது இருக்கும்” எனப் பேசியிருந்தார்.
இதற்கு அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று கூட தெரியாது. அவர் நினைத்ததையெல்லாம் பேசுவார். ஆனால், வழக்குகள் வந்தால் ஒளிந்து கொள்வார் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். அதேபோல் அதிமுகவின் மற்ற அமைச்சர்களும் எஸ்.வி.சேகர் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று சொல்லி இருந்தார். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு படி மேலே போய் மானம், ரோசம் இருந்தால் அ.தி.மு.க.,வில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வாக இருந்தபொழுது பெற்ற சம்பளத்தையும், தற்போது பெறும் பென்ஷனையும் திருப்பி தர முடியுமா? எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முதல்வர் பதில் அளிக்கும் வகையில், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியையும், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாட்களாக அ.தி.மு.க.,விற்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையே நடந்துவந்த வார்த்தை போர்களுக்கு அடுத்து தற்பொழுது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பாஜகவும், அதிமுகவும் நேரடி வார்த்தை மோதலில் ஈடுப்பட்டதில்லை. மறைமுகமாக, சிலேடையாக விமர்சிப்பது உண்டு. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இரு கட்சி தலைவர்களும் நேரடி வார்த்தை போர்களில் ஈடுபடுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பாஜகவை எதிப்பதை போல அதிமுக நாடகமாடுகிறதா? இல்லை அதிமுகவை எதிர்ப்பது போன்று நாடகமாடி திமுக கூட்டணிக்கு பாஜக அச்சாரம் போடுகிறதா என்கிற சந்தேகங்களை அரசியல் ஆர்வலர்கள் கேள்விகளாக முன் வைக்கிறார்கள்.