மு.க. ஸ்டாலின் சொன்னது நீதிமன்ற அவமதிப்பு... அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறியது நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகளுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து நாம் விரிவாகப் பேச வேண்டும். நீட் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் நடைபெறுகிற ஒரு தேர்வு. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது. நீட் தேர்வை நாங்கள் (பாஜக) எப்போதும் ஆதரிக்கிறோம். தமிழகத்திலிருந்து நிறைய தமிழ்ப் பிள்ளைகள் நீட் தேர்வில் தேர்ச்சியாகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “ நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? 2013-ல் நீட் பற்றி முதன் முதலில் விவாதம் நடந்தது. அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருந்தது என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
தமிழகத்தில் அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைகிறார்கள். இதுபோன்ற சூழலில் ஸ்டாலின் சொன்ன கருத்து சட்டப்படி தவறு ஆகும். நீட் தேர்வு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடக்கிறது. மு.க. ஸ்டாலின் இதை சொல்வதே நீதிமன்ற அவமதிப்பு ஆகும். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறியதைத் தவிர்த்திருக்கலாம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.