பழனி தொகுதி பாஜகவுக்கு வேண்டும்... இப்போதே துண்டு போட்ட அண்ணாமலை..!
சட்டப்பேரவைத் தேர்தலில் பழனி தொகுதியை பாஜகவுக்கு தர வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். பின்னர் அமித்ஷா - ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் பாஜகவுக்கு 40 முதல் 50 தொகுதிகளை அமித்ஷா கேட்டதாக தகவல்கள் வெளியாகின. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முடிவான நிலையில், பழனி தொகுதியை பாஜக கேட்டுள்ளது.
பாஜக நடத்திவரும் வேல் யாத்திரை பொள்ளாச்சியில் தொடங்கி நடைபெற்றாது. இந்த யாத்திரையில் பங்கேற்று பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசும்போது,“பழனி சட்டப்பேரவைத் தொகுதியை நிச்சயம் எங்களுக்கு (பாஜக) கொடுக்க வேண்டும். இது எங்களுடைய அன்பான வேண்டுகோள்” என தெரிவித்தார். அதிமுக-பாஜக கூட்டணி முடிவான உடனே தொகுதிகளைக் குறி வைத்து பாஜக கேட்கத் தொடங்கியிருக்கிறது.