வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது... பாஜகவுடன் மோதும் எடப்பாடி பழனிசாமி..!
தமிழக பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. வேல் யாத்திரை நடத்தும் போது 3000 முதல் 5000 பேர் கூட இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.மேலும் இந்து பெண்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
அதேபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை மீண்டும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது. கொரோனா 2வது மற்றும் 3வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆனால், பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் வேல் யாத்திரையை தடுப்பது சரியல்ல. கொரோனா தொற்று குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளதாகவும் பாஜக வாதிட்டு வருகிறது. வேல்யாத்திரையின் போது குறிப்பிட்ட எந்த பகுதியிலும் தங்கப்போவதில்லை. குறிப்பிட்டு எந்த பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை என நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.