கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த சில நாட்களுக்கு முன், காங்கிரசில் இருந்து விலகினார். அப்போது, அவர் ‘அரசியலில் இருந்து ஓய்வு பெறமாட்டேன்’ என அதிரடியாக அறிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதைதொடர்ந்து அவர் பா.ஜ.க.வில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், பா.ஜ.க. தலைவர்கள், எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்ந்து தங்களது கட்சியில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, அவர் ஆதரவு தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை தொடர்பு கொண்டு பாராட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பாவை, எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவர் விரைவில் பா.ஜ.க.வில் இணைவேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டன. விரைவில் எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் இணைவார் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூராப்பா கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் சேருவது பற்றி பேச்சு வார்த்தை நடத்தினோம். மீண்டும் ஒருமுறை அவருடன் பேசிய பின்னர், அவர் பா.ஜ.க.வில் இணைவது உறுதியானது. எந்த நிபந்தனையும் இல்லாமல், அவர் எங்களது கட்சியில் இணைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.