ஒன்றிய அரசு பேச்சு..பின்னணியில் பிரிவினை..பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை என்.ஐ.ஏ. விசாரிக்கணும்..பாஜக அதிரடி!
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருவது குறித்து தேசிய பாதுகாப்பு முகமை (NIA) விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று பதத்தில் அழைக்கத்தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாவற்றிலும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிடுவதால், அதையே திமுகவினரும் பயன்படுத்துகிறார்கள். ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு பாஜகவும், பாஜக ஆதரவாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பிரிவினைவாதம், இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கம் இருப்பதாக பாஜகவினர் ஆவேசப்படுகிறார்கள்.
ஒன்றிய அரசு விவகாரம் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே மட்டுமல்ல, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாறுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ட்விட்டரில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் போன்ற அமைச்சர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருவது குறித்தும், இதில் வேறு ஏதேனும் சதி இருக்கிறதா என தேசிய பாதுகாப்பு முகமை (NIA) விசாரிக்க வேண்டும்" என்று நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இன்னொரு பதிவில், “PTR பழனிவேல் தியாகராஜன் போன்றோர்களின் பிரிவினை பேச்சு தற்போது மத்திய அரசின் சின்னங்களை மாற்றும் அளவிற்கு சென்றுள்ளனர் திமுகவினர். சமூக வலைத்தளங்களில் Dravidian Stock, ஒன்றிய உயிரினங்கள் என பல திட்டங்கள் திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால் திமுகவின் 1962ம் ஆண்டு கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் தற்போது உள்ளதா?” என நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.