சீக்கிரமே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்….அடித்துக் கூறுகிறார் பொன்.ராதா கிருஷ்ணன்….
பா.ஜ.க.வின் வளர்ச்சியை தமிழகத்தில் எந்த கட்சியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி வருகிறது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கூடங்களில் தகுதி நிறைந்த படிப்பு கொடுக்கப்படாத காரணத்தினால் தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
அதே நேரத்தில் தமிழக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள கால அவகாசம் தேவை என்ற தமிழக அரசின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் நிரந்தர விலக்கு என்பது தமிழக மாணவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய தீங்கு என்றும் ஓராண்டு அவகாசம் கொடுத்தால் சரியாகி விடும் என்று கூறிய பொன்னார், தற்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து காரணமின்றி வெளியேறினார். அன்று முதல் சில அரசியல் காரணங்களுக்காக பாஜகவை விமர்சித்து வருவதாக தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் வளர்ச்சியை தமிழகத்தில் எந்த கட்சியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி வருவதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.