பெண்களுக்கான டூவிலர் மானியம் வழங்கும் திட்டம் நிறுத்தம்.. திட்டத்தைத் தொடர பாஜக அடம்..!
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான இருசக்கர வாகனத்துக்கான மானியம் வழங்கும் திட்டத்ததைத் தொடர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானிய அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை கடந்த 2017-18-இல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். “பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தால், இரு சக்கர வாகன திட்டத்துக்கு வரவேற்பில்லை” என்று பெரியகருப்பன் தெரிவித்தார்.
இத்திட்டத்தை தொடர வேண்டும் என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். சட்டப்பேரவைக்கு வெளியே இத்திட்டம் குறித்து பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். “இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உழைக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் என்பது அவர்களே சுயமாக முடிவெடுத்து யாரையும் சார்ந்திராமல் இருப்பதுதான். அதற்கு அடிப்படையாக இருப்பது சொந்த வாகனங்களை பெண்களே இயக்குவதுதான்.
பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம் அவர்களுக்கு இறக்கைகளாக மாறி உள்ளன. இத்திட்டத்துக்கான மானியத்தை நிறுத்துவது, வாகனத்திற்கான மானிய நிறுத்தம் அல்ல. எனவே, இத்திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர வேண்டும்.” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.