bjp planning to destroy admk

தமிழகத்தில் அதிமுகவும்-திமுகவும் இருக்கும் வரை தங்களால் கால் பாதிக்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துள்ள பாஜக, அதற்கேற்ற வகையில் அக்கட்சிகளை துண்டு துண்டாக சிதைக்க முடிவு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதற்காக சரியான தருணம் பார்த்து காத்திருந்த பாஜகவுக்கு, ஜெயலலிதா இறப்பும், கலைஞரின் செயலிழப்பும், நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

பாஜகவின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல் படும் ஓ.பன்னீர்செல்வத்தை கையில் வைத்துக் கொண்டு, சசிகலா தலைமையிலான அதிமுகவை சிதைப்பதே முதல் திட்டம்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, அதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டாலும், அவர் மறைவுக்கு பின்னரே, முழு மூச்சுடன் அந்த திட்டம் செயல்பட ஆரம்பித்துள்ளது.

அதையும் மீறி, கட்சி கையை மீறி போய்விடாமல் ஒருங்கிணைக்க முற்பட்ட சசிகலா, சிறைக்கு சென்று விட்டார். பெரா வழக்கு தினகரனை துரத்திக் கொண்டிருக்கிறது.

நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துக்கும், விஜயபாஸ்கர் வீட்டு ரைடுக்கும் எதிராக, முதல்வர் பழனிசாமி ஏதாவது அறிக்கை விடுவார் என்று எதிர்பார்த்தால், அவர் பத்தோடு பதினோராவது நபராக அமைதியாக இருந்து விட்டார்.

மணல் மன்னன் சேகர் ரெட்டி வழக்கிலேயே, 2011 முதல் போயஸ் கார்டனோடு தொடர்பில் இருந்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல முக்கிய அமைச்சர்களை தங்கள் வலைக்குள் சிக்க வைத்துள்ளது பாஜக. 

அத்துடன் தமிழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மூத்த அதிகாரி ஒருவரை, டெல்லிக்கு வரவழைத்து, எந்தெந்த மார்க்கமாக பண பரிவர்த்தனைகள் நடந்து வருகின்றன, அதில் யார், யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என்பதை ஆதாரத்தோடு திரட்டி வைத்துள்ளனர் அமித் ஷா போன்ற பாஜக தலைவர்கள்.

அவர்கள் வைத்த பொறியில் சிக்கிய முதல் எலிதான் அமைச்சர் விஜயபாஸ்கர். அடுத்தடுத்து, பல அமைச்சர்களும் அந்த பொறியில் சிக்குவார்கள் என்றே பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால், சசிகலா தலைமையிலான அதிமுக இனி பல்வேறு துண்டுகளாக சிதறி சின்னா பின்னமாவதை காணும் தூரம் வெகுதூரத்தில் இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.

ஆர்.கே.நகர் வெற்றி, தோல்வியைவிட அதிமுகவை சின்னா பின்னமாக்குவதே பாஜகவின் தற்போதய செயல் திட்டம், அதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளதன் அடையாளமே, இரட்டை இலை முடக்கம், விஜயபாஸ்கர் வீட்டிலும், மற்ற இடங்களிலும் நடந்த ரைடு என்பதே லேட்டஸ்ட் தகவல்.