விருது மழை பொழிய துடிக்கும் பி.ஜே.பி: தமிழகம் சிக்குமா ஐஸ் வலையில்?
இன்னும் ஓராண்டு சில மாதங்களில் மோடிக்கு அக்னீ பரீட்சை நடக்க இருக்கிறது. அதை நினைத்து இப்போதே பி.ஜே.பி.க்கு குளிர் காய்ச்சல் துவங்கிவிட்டது. இந்நிலையில் தமிழகத்துக்கு ஐஸ் வைக்கும் வேலையை டெல்லி பி.ஜே.பி. தலைமை துவங்கியிருப்பதுதான் மேட்டரே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
2019-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்தே ஆக வேண்டும் எனும் வெறியிலிருக்கும் பி.ஜே.பி.க்கு மற்ற எந்த மாநிலங்களை விடவும் தென்னிந்திய மாநிலங்கள்தான் அதிக கிலியை தருகின்றன. அதிலும் தமிழ்நாட்டையும், கேரளத்தையும் நினைத்தா பி.ஜே.பி.க்கு வயிறு கலக்குகிறது. அதிலும் தமிழகம் தனக்கு எதிராக துள்ளத்துடிக்க முரண்டு பிடித்து நிற்பதாகவே நினைக்கிறது பி.ஜே.பி.
தமிழகத்தில் காலூன்றி, மக்களின் அபிமானங்களை பெற முயன்ற பி.ஜே.பி.யால் அதை சாதிக்க முடியவில்லை. அதனால்தான் ரஜினியை தனி கட்சி துவக்க வைத்து, பின் அவரோடு கூட்டு வைத்து தேர்தலை சந்தித்தோ அல்லது பல தொகுதிகளை வென்ற பின் தன்னோடு கூட்டு சேர வைத்தோ ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திட துடிக்கிறது பி.ஜே.பி.
இந்நிலையில் பைபாஸிலும் தமிழகத்தை ஐஸ் வைத்திட முயல்கிறது பி.ஜே.பி. என்கிறார்கள். இதற்காக அக்கட்சி போட்டிருக்கும் பலே திட்டம்தான் ‘பத்ம விருதுகள்’. அதாவது இந்த முறை தமிழகத்தை சேர்ந்த பல ஆளுமைகளுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் கிடைக்கும் என்கிறார்கள். வழக்கத்தை விட மிக மிக அதிகமான நபர்களுக்கு இந்த விருது கிடைக்கலாமாம்.
நடிகர்கள், பாடகர்கள் என சினிமா ஆளுமைகளை கடந்து சமூக சேவகர்கள், பல துறைகளில் சாதனை புரிந்த தமிழ் திறமையாளர்களை கவுரவித்து அதன் மூலம் ‘நல்ல நிர்வாகி’ எனும் பட்டத்தை வாங்கிக் கொள்வதுடன், தமிழகத்தின் ஜனரஞ்சக அபிமானத்தையும் பெற துடிக்கிறது பி.ஜே.பி. என்கிறார்கள்.
இந்த முயற்சி பலிக்குமா?