தேர்தல் நெருங்கட்டும்... சரியான கூட்டணியை பாஜக அமைக்கும்... ரூட்டை மாற்றி பேசும் எல்.முருகன்..?
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும்போது சரியான கூட்டணியை பாஜக அமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவின் ஊழலற்ற ஆட்சியை அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். எனவே, பாஜகவில் பல்வேறு தரப்பினரும் தாமாக முன் வந்து இணைகிறார்கள். இன்றுகூட கோவையில் தொழில் துறையை சேர்ந்த 120 பேர் இணைந்தனர். வேல் யாத்திரை திட்டமிட்டபடி தர்மபுரியில் மீண்டும் தொடங்குவேன். அதில் மாற்றமில்லை.
வருகிற 21ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். அவருக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க இருக்கிறோம். அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும்போது சரியான கூட்டணியை பாஜக அமைக்கும். தேர்தல் கூட்டணி பற்றி பாஜகவின் தலைமை முடிவு செய்யும்.
இந்த வேல் யாத்திரையே கந்த சஸ்டி கவசத்தை அவ மரியாதை செய்ததன் விளைவாக முருக பக்தர்களை ஆறுதல் படுத்ததான். கொரோனா தொற்று உள்ள போதுதான் தமிழகத்தில் எந்த இடத்திலும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. அதற்கு தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் திறந்ததுதான் காரணம். திமுக நடத்தும் கூட்டங்களில்கூட தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை” என எல். முருகன் தெரிவித்தார்.