பாஜக முருகன் தோல்வி.. பின்னணியில் தனியரசு? அதிர்ச்சி ரிப்போர்ட்.
இதையறிந்த திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் தனியரசு வீட்டுக்கே போய் அவரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். தனியரசுவும் தன் கட்சியினரையும், நட்பு வட்டத்தையும் களத்தில் உசுப்பி விட பாஜக பரிவாரம் ஆட்டம் கண்டு விட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக துணையோடு பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் கணக்கை தொடங்கி உள்ளது. இதில் கடும் போட்டிக்கு இடையே கமல்ஹாஸனை வானதி சீனிவாசன் வென்றது பாஜகவினரை மூச்சு விட செய்திருக்கிறது. ஆனால் எப்படியும் நூலிழையில் வென்று விடுவார் என கருதிய பாஜக மாநில தலைவர் முருகன் நூலிழையில் தோற்றிருக்கிறார். இதற்கு காரணம் கடைசி வாரத்தில் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் அதிரடியான நடவடிக்கைகள்தான் என செய்தி வெளியாகி உலா வருகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் மூவரணி என்ற டைட்டிலில் தமிழக அரசியலில் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாசு ஆகியோர் வலம் வந்தனர். சட்டமன்றத்தில் இவர்களது நடவடிக்கைகள் மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. இம்மூவரும் பாஜக எதிர்ப்பில் செயல்பட்டு வந்த நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக கூட்டணியை நோக்கி நகர்ந்தனர். இவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசு யாருக்கும் ஆதரவில்லை என ஒதுங்கிக்கொண்டார். ஆனால் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற முனைப்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதேநேரத்தில் அமைதி காத்த தனியரசு தனது சொந்த ஊரான தாராபுரத்தில் பாஜக வெற்றி பெறுவதை கொஞ்சம்கூட விரும்பவில்லை.
இதையறிந்த திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் தனியரசு வீட்டுக்கே போய் அவரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். தனியரசுவும் தன் கட்சியினரையும், நட்பு வட்டத்தையும் களத்தில் உசுப்பி விட பாஜக பரிவாரம் ஆட்டம் கண்டு விட்டது. கடைசியில் சொற்ப ஓட்டுகளில் பாஜக தலைவர் முருகன் தோல்வியை தழுவினார். இது தங்களுக்கு கிடைத்த வெற்றியாக தமிழக கொங்கு இளைஞர் பேரவையினர் கொண்டாடி வருகிறார்கள். தனியரசுவுக்கு ஒரு சீட்டை திமுக வழங்கியிருந்தால் கொங்கு பகுதியில் திமுக கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கலாம் என்ற பேச்சு திமுகவினரிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.