அய்யாக்கண்ணு கன்னத்தில் பளார் விட்ட பெண் !! திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பாஜக அராஜகம்…..
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சன்ம் செய்து திருச்செந்தூர் கோவில் வளாகத்துக்குள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்த தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்ற விதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கடந்த 1–ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசாரப் பயணத்தைத் மேற்கொண்டுள்ளனர்.
இக்குழுவினர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், கோவில் வளாகத்தில் துண்டு பிரசுரம் கொடுக்கக்கூடாது என தடுத்தார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாஜக பெண் நிர்வாகி நெல்லையம்மாள், அய்யாக்கண்ணு கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டார்.
தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளை நெல்லையம்மாள் செருப்பால் அடிக்க முயன்றார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் வளாத்தில் இருந்த பக்தர்கள் அவர்களை சமரசம் செய்தனர்.
கோவில் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்தாலும் அங்கு எந்த போலீசும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, மரபணு மாற்றப்பட்ட விதைகளை பிரதமர் மோடி கொடுக்கக் கூடாது, அவருக்கு நல்ல எண்ணத்தை கொடுக்க வேண்டும், இந்த விதைகளை இந்தியாவில் இறக்குமதி செய்யமல் இருக்க கடவுளிடமும் வேண்டுகிறோம் என்றார். மக்களுக்கு சோறு போடும் இந்த விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடும் எங்களை பாஜகவினர் எப்படி தாக்குகிறார்கள் என்பதை தமிழர்கள் உணரவேண்டும் என அய்யாக்கண்ணு வேதனைப்பட்டார்.