உங்க போக்கே சரியில்ல.. பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 31ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதையடுத்து அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட கல்யாண ராமன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, பிரிவினையை உண்டாக்கும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ள நேரலையில், இவரது செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட காவல்துறை எஸ்பி அருளரசு பரிந்துரைத்திருந்தார்.
எஸ்பியின் பரிந்துரையின் பேரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவின்பேரில், கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.