மாடு வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் பாஜக, இந்து முன்னணி..?? டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்.
மாடுகளை வியாபாரத்திற்கு வாங்கி செல்லும் போது ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பணம் பறிப்பு மற்றும் மாடுகளை திருடி செல்வதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மாடுகளை வியாபாரத்திற்கு வாங்கி செல்லும் போது ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பணம் பறிப்பு மற்றும் மாடுகளை திருடி செல்வதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அனைத்து கால்நடை சந்தை வியாபாரிகள் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினருடன் இணைந்து விசிக கட்சி துணை பொதுசெயலாளர் வன்னியரசு டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்கி தமிழ்நாடு, கேரளா கால்நடை சந்தைகளுக்கு வாகனங்களில் ஏற்றிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் சமீபகாலமாக மாடுகளை ஏற்றி கொண்டு திருப்பூர் வழியாக வரும் போது, இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த தமிழ்செல்வன் வாகனத்தை வழிமறித்து பசுமாட்டை கடத்தி செல்வதாக கூறி 10 ஆயிரம் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார். ஓட்டுனர் கொடுக்க மறுத்ததால் மாட்டை கடத்துவதாக திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே போல் மாடுகளை வாங்கி செல்லும் போது தொடர்ந்து மேற்கு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி, சிவசேனா போன்ற கட்சியினர் வேண்டுமென்றே மதமோதலை ஏற்படுத்தும் வகையில் பசுவதை எனக்கூறி பொய்யான தகவலை பரப்பி மிரட்டி மாடுகளை பறித்து செல்கின்றனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஏடிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீராமிதுன் மீது கொடுத்த புகாரில் 7 பிரிவின் கீழ் சென்னை காவல்துறை வழக்குபதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், உடனடியாக நடிகை மீராமிதுனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வன்னியரசு கூறினார்.