பாஜக எத்தனை இடங்களை கைப்பற்றும் ? ஏபிபி – சி-ஓட்டர் கருத்துக் கணிப்பு என்ன சொல்லுது ?
ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக 264 இடங்களை கைப்பற்றும் என ஏபிபி – சி-ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏபிபி மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து கருத்து கணிப்பை நடத்தி உள்ளது. அதில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி 264 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 141 இடங்களும் பிற கட்சிகளுக்கு 138 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு 264 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதால் அக்கட்சி அப்செட் ஆகியுள்ளது.
அதே நேரத்தில் ஏபிபி – சி-ஓட்டர் மாநில வாரியாகவும் எந்தெந்த கட்சி, எத்தனை இடங்களை பிடிக்கும் எனவும் வெளியிட்டுள்ளது.
அதன்படி உ.பியில் உள்ள 80 இடங்களில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு 46, பா.ஜ., கூட்டணிக்கு 29, காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள 40 இடங்களில் பா.ஜ., கூட்டணிக்கு 36, காங்கிரஸ் கூட்டணிக்கு 4, மகாராஸ்ஷ்ட்ராவில் என்ன 48 இடங்களில் பாஜக கூட்டணிக்கு 35 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 13 இடங்களும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு.வங்கத்தில் உள்ள 42 இடங்களில் பாஜக 8 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 34 இடங்களிலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 தொகுதிகளில் பாஜக கூட்டணி 14 இடங்களையும், பிஜு ஜனதா தளம் கட்சி 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 இடங்களில் பா.ஜ., கூட்டணி 3 , காங்கிரஸ் 10 ஜே.வி.எம் கட்சி 1 மற்றும் சட்டீஸ்கரில் உள்ள 11 இடங்களில் பா.ஜ.,கூட்டணி 6, காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 20, காங்கிரஸ் கூட்டணி 5 இடங்கள் கிடைக்கும் என்றும், டெல்லியில் உள்ள 7 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்றும் பஞ்சாப் உள்ள 13 இடங்களில் பா.ஜ., 1 , காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களையும் பிடிக்கும் என தெரியவந்துள்ளது.
அரியானா மாநிலத்தில் உள்ள 10 இடங்களில் பாஜக 7 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களை 3 இடங்களையும் பிடிக்கும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உத்தரகண்ட், இமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.