பாஜகவே வெளியேறு….புதிய இயக்கத்தை தொடங்கி வைத்து மம்தா பானர்ஜி அதிரடி !!!
பாஜகவே வெளியேறு என்பதே எதிர்வரும் தேர்தலில் எதிர்கட்சிகளின் தாரக மந்திரமாக இருக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி தொடங்கி வைத்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவள விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றுப் பேசினார். அப்போது ஆளும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை இன் தொடர்ந்து நடத்த முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்தார். வரும் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவே வெளியேறு என்பதை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு பொதுமக்களின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருவதாகவும், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று குற்றம்வாட்டிய மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிராக செயல்பட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாஜக அரசு நாட்டை இரண்டாக பிரிக்க நினைக்கிறது. ஆனால் அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பா.ஜ.க.வின் அரசியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் மம்தா தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவே வெளியேறு என்பதே எதிர்கட்சிகளின் கோஷமாக இருக்கும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.