பாஜக- விவசாயிகள் மோதல்.. உ.பி போலீஸ் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 8 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தில் பாஜகவினர் நுழைந்து கலவரம் செய்ததே இந்த கொடூரத்திற்கு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் கடந்த 10 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு அவர்களைப் புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து அம்மாநில விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில் உத்தரபிரதேச மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜகவினர் வருகை தந்திருந்தனர். அப்போது விவசாயிகள் பாஜக தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அப்போது முதலமைச்சருடன் வந்த 2 கார்கள் விவசாயிகள் இருந்த கூட்டத்திற்குள் கண்மூடித்தனமாக புகுந்தது, அதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கினர், விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாக கூறப்பட்டது, இந்நிலையில் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரில் இருந்த பாஜக தொண்டர்கள், ஓட்டுநரை அடித்துக் கொன்றனர். தொடர்ந்து நடந்த போராட்டம் வன்முறைக் களமாக மாறியது, அதை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர், இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதைத் தடுக்கவே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் பாஜகவினர் 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தின் போது தனது மகன் அங்கு இல்லை எனவும், அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது எனவும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். விவசாயிகள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு காங்கிரஸ் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன, இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.