எல்.முருகனை சாதிய ரீதியாக அவமானப்படுத்திட்டாங்க! டி.ஆர் பாலு மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்திடுக-பாஜக
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சாஸ்திரி பவனில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக பட்டியலின அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது
![BJP demands to file a case against TR Balu under Atrocities Act KAK BJP demands to file a case against TR Balu under Atrocities Act KAK](https://static-ai.asianetnews.com/images/01hp38pfhz7y315b71w20ysf2a/whatsapp-image-2024-02-08-at-7-57-23-am_363x203xt.jpg)
வெள்ள பாதிப்பு- நிதி கொடுக்கவில்லை
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு சென்னை மற்றும் தூத்துக்குடி பெரிதும் பாதிக்ப்பட்டது. இதற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. மத்திய அரசு சார்பாக குழுவும், மத்திய அமைச்சர்களும் நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இருந்த போதும் இரண்டு மாத காலம் ஆகியும் தமிழகத்திற்கு உரிய முறையில் நிதி வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்தநிலையில், பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைப்பெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு புயல் பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. என விமர்சித்தார்.
திமுக - பாஜக மோதல்
மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை என குற்றம்சாட்டி பேசினார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு பேச முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.ஆர்.பாலு, உடனே, நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள். தயவு செய்து உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர். நீங்கள் அமைச்சராகவும் இருக்க தகுதியற்றவர் என எல்.முருகனை நோக்கி, டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார். இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
டி.ஆர்.பாலு மீது புகார்
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு செய்த செயலை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் டி ஆர் பாலு சாதிய உள்நோக்கத்தோடும் மிக மோசமாக சாதிய வன்மத்தோடும் சாதிய அதிகார அடக்குமுறை ஆணவத்தோடும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு டி ஆர் பாலு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
திடீரென்று சாதி பற்றி பேச்சு.. மிக்க நன்றி கார்கே.. ராஜ்யசபாவில் காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி!