1970-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவித்து அரசாணை வெளியிட்டார். அப்போதே அப்பாடலை முழுமையாக பயன்படுத்தாமல் அதில் சில வரிகளை தவிர்த்தது சர்ச்சையானது.

தமிழக முதல்வர் தமிழ் மீது நல்லெண்ணம் கொண்டு செய்த முயற்சியை அரைகுறையாக செயல்படுத்தாமல், அவர் பதவி ஏற்கும் போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் படி செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசு மாநில பாடலாக அங்கீகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் தாய் வாழ்த்தினை அரசின் மாநில பாடலாக அங்கீகரித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை பா.ஜ.க. மிகவும் வரவேற்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் வாழ்த்துப் பாடலாக அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய, ‘நீராடும் கடலுடுத்த..’ என்னும் பாடல் பாடப்பட வேண்டும் என்னும் கோரிக்கை 1931-ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கை தீர்மானமாக இடம் பெற்றது. தொடர்ந்து கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் இப்பாடலை வாழ்த்துப் பாடலாக பாடி வந்தார்கள். ஆனால், அப்பாடல் முழுமையான பாடலாக இருந்தது. இதனை தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வராக இருந்த அண்ணாதுரைக்கு கரந்தை தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். 

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 1891-ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொகும்’ என்ற பாடலை 1970-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவித்து அரசாணை வெளியிட்டார். அப்போதே அப்பாடலை முழுமையாக பயன்படுத்தாமல் அதில் சில வரிகளை தவிர்த்தது சர்ச்சையானது. மனோன்மணியம் சுந்தரனார் இருந்திருந்தால், தாம் எழுதிய இப்பாடலுக்கு கிடைத்த மாநில அரசின் அங்கீகாரத்தை நினைத்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். ஆனால் அப்பாடலை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தாமல் அதில் சில வரிகளை நீக்கி திருத்திப் பயன்படுத்துவதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

சுந்தரனார் எழுதிய கவிதை வரிகளை சிதைக்காது முழுமையான பாடல் வரிகளை பயன்படுத்துவதே சுந்தரனாருக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.ஆகவே தமிழக முதல்வர் தமிழ் மீது நல்லெண்ணம் கொண்டு செய்த முயற்சியை அரைகுறையாக செயல்படுத்தாமல், அவர் பதவி ஏற்கும் போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் படி, கடவுள் நம்பிக்கை வரிகளை சிதைக்காமல் முழுமையாகப் பாடலை பயன்படுத்துவதே கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரனாருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும். இதை தாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.” என்று அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.