ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்சன்..! மு.க.ஸ்டாலின் தொகுதியில் பாஜக அண்ணாமலையின் செட்-அப் ஷூட்..!
மழை நீரில் முழங்கால் தண்ணீரில் படகில் சென்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எடுத்த செட்-அப் போட்டோ ஷூட் பயங்கர வைரலாகி வருகிறது.
மழை நீரில் முழங்கால் தண்ணீரில் படகில் சென்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எடுத்த செட்-அப் போட்டோ ஷூட் பயங்கர வைரலாகி வருகிறது. மழை பாதித்த பகுதியில் நிவாரண தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் மழை பாதித்த பகுதிகளை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படகில் சென்றபடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மக்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் இதுபோன்று படகில் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் மீட்புப் பணிக்காக வந்த பாஜகவினரை திமுகவை சேர்ந்தவர்கள் விரட்டியடித்தனர்” எனக் குற்றம்சாட்டினார்.
இது போன்ற பேரிடர் காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்ற அண்ணாமலை, மாநில அரசு உடனடியாக மழை பாதித்த பகுதியில் நிவாரண தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, பெருமழை குறித்து விரைவில் மத்திய அரசு நிவாரண தொகை குறித்து அறிவிக்கும் என்றும் கூறினார். இதையெல்லாம் விட ஹைலைட் அவர் அங்கு எடுத்த போட்டோஷூட் செட் அப் தான் வைரலாகி வருகிறது.
பாஜகவினருடன் முழங்கால் தண்ணீரில் சென்ற அவர் பின்னால் நிற்பவர்களை விலகிச் செல்லுங்கள். இந்த ஆங்கிலில் போட்டோ எடுக்கலாம். பின்னால் யாரும் நிற்க வேண்டும். இதோட கட் பண்ணிக்கலாம். பிரகாஷ் அண்ணே இங்கிட்டு வாங்க. அப்படியே டாப்பை தூக்கு. ஃபுல் ஒய்டு எடு நல்லா. அப்போது ஒரு பெண் வெள்ளத்தில் நின்றபடி அண்ணாமலையிடம் பேசுகிறார். அதனை கவனித்த போட்டோகிராஃபரிடம், உடனிருப்பவர் அந்தம்மாவிடம் கேட்பதை போன்ற ஆங்கிளில் எடு எனக் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.