புதுச்சேரியில் ரூ. 320 கோடியில் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்ட மத்திய அரசிடம் நிதி பெறும் முயற்சியில் புதுச்சேரி அரசு இறங்கியுள்ளது.  

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் சட்டப்பேரவை இயங்கி வருகிறது. ஆனால், தலைமை செயலகம் தனியாக கடற்கரை சாலையில் உள்ளது. சட்டப்பேரவையும் தலைமை செயலகமும் இணைந்த ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகத்தை கட்ட முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் அரசு நிலத்தை தேர்வு செய்துள்ளது. இங்கு ரூ.320 கோடியில் புதிய ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட புதுச்சேரி அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


இதற்குத் தேவைப்படும் நிதியை மத்திய அரசிடமிருந்து பெறவும் புதுச்சேரி அரசு முயற்சித்து வருகிறது. ஏற்கனவே புதுச்சேரி சபாநாயகர் செல்வம், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவிடம், சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவதற்கு நிதி கோரியிருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் நிதியைப் பெற அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அவர்கள் சந்தித்தனர். அப்போது நிதியுதவி தொடர்பாக முதல்வர் ரங்கசாமியின் கடிதத்தை அளித்தனர். மத்திய அமைச்சர் கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.