இந்துக்களை இகழும் மு.க. ஸ்டாலினை அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..!
இந்துக்களை இகழ்வாக பேசும் ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல்யாத்திரை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் ‘வெற்றிவேல் யாத்திரை’யை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை ஒரு மாத காலத்துக்கு நடத்த தமிழக பாஜக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த யாத்திரை திருத்தணியில் இன்று தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “யாத்திரைக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
கரோனா பரவல் தொற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு இந்த யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. என்றாலும் திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக அறிவித்திருந்தது. திருத்தணியில் யாத்திரையைத் தடுக்கும் வகையில் 6 மாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து காலை 8 மணிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணிக்குக் கிளம்பினார்.
இந்நிலையில் எல்.முருகன் கைது செய்யப்படும்பட்சத்தில் தம்ழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில், “காவல்துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும்; இல்லையெனில் போராட்டம் நடைபெறும். இந்துக்களை இகழ்வாக பேசும் ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல்யாத்திரை” எனத் தெரிவித்துள்ளார்.