இது பணிவா, தலைமைத்துவமா..? இந்த விஷயத்தில் தல தோனியும், தளபதி விஜய்யும் ஒன்றுதான் போல...!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் எம்.எஸ்.தோனியும் எடுத்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு அடுத்து அதிகம் பேச வைத்திருக்கிறது, நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினரின் வெற்றிதான். கட்சி சாராத கிராம ஊராட்சிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 169 பேரில் 110 பேர் வெற்றி பெற்றதாக இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், வெற்றி பெற்றவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தானா என்ற கேள்வியை சமூக ஊடகங்களில் சிலர் முன் வைத்தனர். ஒரு படி மேலே போய், அவர்கள் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றிருப்பார்கள் என்ற கருத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானே முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், நடிகர் விஜய்யை சென்னையில் சந்தித்து ஆசி பெற்றனர். இதனையடுத்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “வெற்றி வாகை சூடிய விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் தளபதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதனைத் தீர்க்கும் நல்வாழ்வு பணியினை தளபதி உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி மக்கள் பணிகளை தொடருவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
முன்பு கூறியபடி 110 பேர் வெற்றியாளர்கள் என்பதற்கு மாறாக அறிக்கையில் 129 பேர் வெற்றி பெற்றதாகப் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அதோடு வெற்றி பெற்ற 129 பேருடைய பெயர், வயது, வெற்றி பெற்ற பதவி, கிராமம், ஒன்றியம், மாவட்டம் என அனைத்து தகவல்களுடன் அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே வெற்றி பெற்றவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. வழக்கமாக வெற்றியாளர்களுடன் நடுநாயகமாக அமர்ந்து தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், நடிகர் விஜய் வெற்றியாளர்களை முன்னிலைப்படுத்தி, ஓர் ஓரமாக உட்கார்ந்திருப்பது கனவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லும்போதெல்லாம் கோப்பையை வாங்கி, அணி வீரர்களிடம் கொடுத்துவிட்டு, அணித் தலைவரான எம்.எஸ். தோனியை ஓரமாக நிற்பதை கவனித்திருக்கலாம். அண்மையில் துபாயில் நடந்து முடிந்த ஐபிஎல் கோப்பை இறுதிப் போட்டியிலும், இந்தக் காட்சியைக் காண முடிந்தது. நடிகர் விஜய்யும் தோனியைப் போலவே வெற்றியாளார்களைப் பிரதானமாக்கி, ஓரத்தில் உட்கார்ந்திருப்பது புகைப்படம் பேசும் படமாக்கியிருக்கிறது. இந்த விஷயத்தில் ‘தல’ தோனியும் ‘தளபதி’ விஜய்யும் ஒரே மாதிரிதான் போல!