மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மீட்புக் குழுவினர் தயார் நிலையிலேயே உள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்று மதியத்திற்குள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துவிடும். 

உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை எழிலகத்தில் மாண்டஸ் புயல் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மீட்புக் குழுவினர் தயார் நிலையிலேயே உள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்று மதியத்திற்குள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துவிடும்.

புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சில நாட்களில் உரிய நிவாரணம் வழங்கப்படும். பேருந்து போக்குவரத்து வழக்கம்போல் செயல்படுகிறது. இன்று மாலைக்குள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். மழை வந்தாலும், புயல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். 9 மாவட்டங்களில் 205 நிவாரண மையங்களில் 9,280 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வந்தால்தான் வரும் காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படாது. 

உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டது. புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். கட்டுமரம் முழுமையாக சேதமடைந்தால் ரூ.32,000, புகுதி சேதமானால் ரூ.10,000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.