எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தார் மீதான வழக்கை வாபஸ் பெறப்போவதில்லை என பானுமதியின் தாய் பால்கனி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

எம்.பி. சசிகலா புஷ்பா, கட்சி தலைமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் புகார் கூறிதை அடுத்து கட்சி தலைமை அவரை அதிரடியாக நீக்கியது. இதனை அடுத்து எம்.பி. சசிகலா எம்.பி. மீது பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டன.
சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்த இளம் பெண்கள், தங்கள் மீது பாலியல் தொல்லை தருவதாகவும், டார்ச்சரை அனுபவித்து வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இளம் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி சார்பில் வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் ஆஜராகி வருகிறார்.

திசையன்விளையில் உள்ள வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீட்டை நேற்று மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர். வீட்டில் உள்ள பொருட்கள், ஜன்னல் கண்ணாடிகளை அவர்கள் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா மீதான வழக்கில், வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வற்புறுத்தலின் பேரில் இந்த புகார் கொடுத்ததாகவும், அதனால் இந்த வழக்கை வாபஸ் பெறப்போவதாக பானுமதியும், அவரது தாய் பால்கனியும் பேட்டி அளித்ததாக தகவல்கள் பரவியது.
இதனை அடுத்து, திசையன்விளை, ஆனைக்குடியில் உள்ள பானுமதியின் தாயை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய பானுமதியின் தாய், புகார் வாபஸ் பெறறுவதாக கூறுவது முழுக்க முழுக்க வதந்தி என்று கூறினார். சசிகலா புஷ்பா மீதான வழக்கை திரும்ப பெறும் எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இல்லை என்றும் திட்டவட்டமாக அவர் கூறினார். அதேபோல் வழக்கை திரும்ப பெற யாரும் கட்டாயப்படுத்தவும் இல்லை என்று பால்கனி கூறினார்.
