தாவூத் இப்ராகிமுக்கே டப் கொடுத்த பெங்களூரு தாதா..!! நிழல் உலக மன்னன் முத்தப்பா ராய் மரணம்..!!
பணத்திற்காகவும் புகழுக்காகவும் பல அப்பாவி உயிர்களை அடக்கி அதன் மீது தன் நிழல் உலக தாதா கோட்டையை கட்டி எழுப்பிய முத்தப்பாவின் மூச்சு இன்று அதிகாலை 2 மணிக்கு அடங்கிப் போனது .
பெங்களூரு முன்னாள் நிழலுலக தாதாவும் , ஜெய் கர்நாடகா அமைப்பின் நிறுவனருமான முத்தப்பா ராய் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் . அவருக்கு வயது-68 , ராய் , தென் கர்நாடகாவில் புட்டூரில் நெட்டலா நாராயண ராய் மற்றும் சுசீலா ராய் ஆகியோரின் துலு மொழி பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார்சாதாரண குடும்பத்தில் பிறந்த நெட்டலா முத்தப்பா ராய் பின்னாளில் , நிழல் உலக தாதா , ரியல் எஸ்டேட் அதிபர் , கர்நாடக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வந்த சுயநலமற்ற சமூக ஆர்வலர் , தாவூத் இப்ராகிமின் கூட்டாளி - எதிரி , என முத்தப்ப ராய்க்கு முகங்கள் பல. ஆனால் இந்த குணச் சித்திரங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் முத்தப்பாவின் உண்மையான ரத்தசரித்திரம் மிக கொடூரமானது. முத்தப்பா மீது இந்திய தண்டனை சட்டம் , ஆயுதச் சட்டம் , பயங்கர வெடி பொருட்கள் தடுப்புச் சட்டம் , கொலை , கொள்ளை ஆட்கடத்தல் என எக்கச்சக்க வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது.
1980 - 90களில் வர்த்தக நகரான மும்பை தாவூது இப்ராஹிம் கையில் இருந்தது என்றால் , எலக்ட்ரானிக் சிட்டி மொத்தமும் முத்தப்பா வின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும் அவர் இறக்கும் வரையிலும் என்று கூட சொல்லலாம் , ஒரு கட்டத்தில் மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் உடன் நட்பு ஏற்பட்டு பிறகு அவருக்கே தண்ணி காட்டியவர் முத்தப்பா ராய் என்கின்றனர் , ஒரு கட்டத்தில் தாதா உலகில் கொடிக் கட்டி பறந்த முத்தப்பாவை ஒருபுறம் காவல்துறையும் மறுபுறம் எதிர் தரப்பும் குறி வைக்க அதிர்ஷ்டவசமாக குண்டு காயங்களுடன் உயிர் தப்பிய முத்தப்பா , பிழைத்தால் போதுமென இந்தியாவிலிருந்து துபாய்க்கு தப்பிச் சென்றார், பின்னர் அங்கிருந்தபடியே கூலிப் படைகளை ஏவி கொலை செய்தல் , ஆள் கடத்தல் , கட்டப்பஞ்சாயத்து என பெங்களூருவில் தன் தாதா சாம்ராஜ்யத்தை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொண்டார் முத்தப்பா, அங்கிருந்தபடியோ கர்நாடக மாநிலத்தில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தார் . பின்னர் மும்பை வந்த அவர் 2001 ஜனவரி மும்பையில் இருந்துகொண்டு கூலிப்படையின் மூலம் ரியல் எஸ்டேட் அதிபர் சுப்புராஜ் என்பவரை கொலை செய்து தன் இருப்பை பெங்களூரு மக்களுக்கு காட்டினார் . பின்னர் 2002 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற அவர் அந்நாட்டு போலீசாரால் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார் முத்தப்பா.
அனைத்தையும் கர்நாடக மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன் நான் முற்றிலும் திருந்தி விட்டேன் என மீண்டும் கர்நாடகாவுக்கு நுழைந்தவர் ஜெய் கர்நாடகா என்ற அமைப்பைத் தொடங்கினார் , அரசியல்வாதி என்ற போர்வையில் மீண்டும் தன் பழைய பாணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேண்டப்பட்டவர் களுக்காக தன் கிருமினல் ஆபரேஷன்களை அரங்கேற்றி வந்த முத்தப்பா ஒருகட்டத்தில் முழு நேர அரசியல் வாதியாக மாற முயன்றார் , ஆனால் கர்நாடக மக்கள் முத்தப்பாவை ஏற்றுக்கொள்ளவில்லை . பிடதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்த அவர் , திடீரென பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார் . மூளைப் புற்று நோயுடன் வாழ்ந்துவந்த முத்தப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார் , பணத்திற்காகவும் புகழுக்காகவும் பல அப்பாவி உயிர்களை அடக்கி அதன் மீது தன் நிழல் உலக தாதா கோட்டையை கட்டி எழுப்பிய முத்தப்பாவின் மூச்சு இன்று அதிகாலை இரண்டு மணிக்கு அடங்கிப் போனது .
முத்தப்பா ராய்க்கு மொத்தம் 2 மனைவிகள் முதல் மனைவியின் பெயர் ரேகா இவருக்கு ராக்கி , விக்கி என 2 மகன்கள் உள்ளனர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மனைவி ரேகா சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் காலமானார் இந்நிலையில் 2018ம் ஆண்டு அனுராதா என்பவரை இரண்டாவது தாரமாக மணமுடித்தார் முத்தப்பா. அவரது மகன் ராய் 2011 காஞ்சில்டா பாலே என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார், முத்தப்பா மரணமடைந்த நிலையில் , அவரது மூத்த மகன் தற்போது கனடாவில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. முத்தப்பா ராயின் தாதா உலக வாழ்க்கையை பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா கதை திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் , மங்களூர் , பெங்களூர் , மும்பை துபாய் மற்றும் லண்டன் போன்ற இடங்களில் அது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.