பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.. காவலர்களுக்கு அறிவுரை.. போலீஸ் கமிஷனர் ஆக்ஷன்.
அப்போது பாதுகாப்பு பிரிவு காவலர்கள் மற்றும் புகார் மனு பெறும் காவலரிடம், பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் மனநிலையை பொறுத்து நடந்துகொள்ள வேண்டும் என ஆணையர் அறிவுரை வழங்கினார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்கள் பெறக்கூடிய அறையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் 3வது எண் கொண்ட கேட் வழியாக பொதுமக்கள் உள்ளே நுழைந்து புகார்கள் அளித்து வருவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய குறைதீர்க்கும் அறை மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே புகார்களை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி முதல் மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக பொதுமக்கள் வந்து புகார் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் புகார் மனுக்கள் பெறக்கூடிய குறைதீர்க்கும் அறை மற்றும் புகார் அளிக்க வரக்கூடிய பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் இடம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாதுகாப்பு பிரிவு காவலர்கள் மற்றும் புகார் மனு பெறும் காவலரிடம், பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் மனநிலையை பொறுத்து நடந்துகொள்ள வேண்டும் என ஆணையர் அறிவுரை வழங்கினார். பின்னர் காவல் ஆணையர் அலுவலக பத்திரிக்கையாளர் அறைக்கு வந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.