before tomorrow night a time bomb is picking for ttv dinakaran says h raja
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்.எல்.ஏ.,வாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வரும் சட்டசபை கூட்டத் தொடரில் முதல்முறையாகப் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார். அவர் அவ்வாறு பங்கேற்று முதல் முதலில் பேசும்போது, கட்சியினர் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் கட்டளையிடும் அளவுக்கு தினகரன் குறித்த பார்வை கட்சியில் உள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திமுக.,வினரின் படு தோல்வி குறித்து கோடிட்டுக் காட்டினார். அப்போது, இத்தனை வருடம் அரசியல் அனுபவம் உள்ள மு.க.ஸ்டாலின் எப்படி ஆர்.கே.நகரை கோட்டை விட்டார் என்று அதிசயமாக உள்ளது என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற விவகாரம் பல்வேறு மட்டத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தொகுதி மக்களிடம் பொய்யான வாக்குறுதி கொடுத்து, பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுள்ளார் என்று கூறி, பணம் கொடுத்த சிலரை போலீஸார் பிடித்தும் சென்றுள்ளனர்.
இதனிடையே அவர் வெகு நாட்கள் இந்தப் பதவியில் இருக்க மாட்டார், இது கானல் நீர்தான் என்று முதல்வர் எடப்பாடியாரே தினகரன் வெற்றி குறித்து கருத்து தெரிவித்தார். ஆனால், தினகரனோ இன்னும் 3 மாதத்தில் ஆட்சியை என் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவேன், நானே முதல்வர் ஆவேன் என்றெல்லாம் கூறி வருகிறார்.
இந்நிலையில் இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது. அது எரிந்து முடிந்துவிடும். ஆர்.கே. நகரில் தினகரன் வெற்றி பெற்றது தொடர்பாக சர்ச்சைகள் உள்ளது. அனேகமாக நாளை இரவுக்குள் ஒரு டைம்பாம் வெடிக்கலாம் என்று எதையோ கோடிட்டுக் காட்டி விட்டு நகர்ந்தார். இதனால் டிடிவி தினகரனுக்கு எதிராக, ஆர்.கே.நகர் வெற்றி தொடர்பாக நாளை இரவுக்குள் ஏதோ பூகம்பம் வெடிக்கலாம் என பல்வேறு கருத்துகள் வலைத்தளங்களில் உலவின.
ஆனால், டிடிவி தினகரன் மீதான அன்னியச் செலாவணி மோசடி வழக்கு நாளை வருகிறது. 1996ஆம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றது தொடர்பாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்குகள், கடந்த 20 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக தினகரன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சில முறை ஆஜராகி உள்ளார். இந்த வழக்கில் தினகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வரலாம் என்று உறுதியாக நம்பப் படுகிறது.
அவ்வாறு வந்தால், தினகரன் வெற்றி பெற்ற விவகாரம் அல்லது அவரது பதவி குறித்த கேள்வி பரவலாக இப்போது முன் வைக்கப் படுகிறது. அந்த வகையில், நாளை ஒரு பூகம்பத்தை எதிர்பார்க்கலாம்தான்!
