ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என கனல்கண்ணன் பேசியது என்ன தவறு என இந்து  தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என கனல்கண்ணன் பேசியது என்ன தவறு என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். யூ2 புரூட்டஸ் மைனர் விஜய்க்கு கருத்துச் சுதந்திரம் இருக்கும்போது, கனல் கண்ணனுக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தில் திராவிடம், பெரியாரியம் போன்ற கருத்துகளுக்கு எதிராக பாஜக இந்து இயக்கங்கள் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலைகள் ஆங்காங்கே அவமரியாதை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து உரிமைப் பேரணி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைத்துறை பைட் மாஸ்டர் கனல்கண்ணன், தந்தை பெரியார் சிலையை இழிவு படுத்திப் பேசினார்.

ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் கடவுள் இல்லை என்று சொல்பவரின் சிலை இருக்கிறது, அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என பேசினார். அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு அவரை கைது செய்ய தேடி வருகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இந்து இயக்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த வரிசையில் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கனல் கண்ணனுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

தில்லை நடராசரையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கியை வாயில் வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே நன்னாள் என்று பேசிய அயோக்கியர்களை கண்டிக்காத கைது செய்யாத காவல்துறை, நடராஜ பெருமான் குறித்து அவதூறாக பேசி இதுவரை கைது செய்யப்படாத யூ2 புரூட்டஸ் மைனர் விஜய் போன்றவர்களுக்கு கருத்துச்சுதந்திரம் இருக்கும்போது, இறை நம்பிக்கையோடு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மனம் புண்படும்படியாக கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுள் இல்லை என்று சொல்லக்கூடியவர்களின் கருப்பு தாடி உருவத்தை அகற்ற வேண்டும் என்று கனல்கண்ணன் பேசியது எந்த வகையில் தவறு?

இவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா? மசூதி முன்பாக, சர்ச் முன்பாக ஈவேரா சிலைகளை வைக்காத திராவிட சித்தாந்தவாதிகள் இந்து கோயில்களுக்கு முன்பாக மட்டும் ஈவேரா சிலைகளை நிறுவி கடவுள் மறுப்பு வாசகங்களை நிறுவியதால்தான் சர்ச்சை தொடர்கிறது. கடவுள் மறுப்பு கல்வெட்டு வாசகங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லை எனில் இறைமறுப்பு வாசகங்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் தமிழகத்தில் நடத்திட இந்துசமயம் தயாரானால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கனல்கண்ணன் அனல் கிளப்பி விட்டுள்ளார், வாழ்த்துக்கள் கனல் கண்ணன் அவர்களே என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.