“மனம் திருந்தி வருவார்கள்... அதிமுகவை வழிநடத்தி செல்வேன்”... தினகரன் பிரதர் அதிரடி
அதிமுகவை மீட்டெடுத்து வழி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ள டிடிவி பாஸ்கரன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கூறியுள்ளார்.
டிடிவி பாஸ்கரன் சமீப நாட்களாக அரசியல் குறித்த கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ அதிமுகவின் சின்னம், கொடிதான் வேறு நபர்களிடம் உள்ளது 95 சதவிகிதம் தொண்டர்கள் எங்களிடம்தான் உள்ளனர் எனக் கூறினார்.
தினகரன் அவரது பாணியிலும் நான் எனது பாணியிலும் தனித்துச் செயல்படுவோம்” என்று தெரிவித்திருந்தார். மேலும், கட்சியை வழிநடத்தும் தகுதி தங்களுக்கே உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிடிவி பாஸ்கர் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பின் போது, “ வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சை அல்லது ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவேன். இளைஞர்கள் மூலம் அதிமுகவுக்கு பலம் சேர்ப்பதே எனது பாசறையின் நோக்கமாகும்.
பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைவாதிகள். அவர்கள் நிறைய பணம் சம்பாதித்துவிட்டார்கள். யாரிடமோ சரணடையும் சூழ்நிலையில் உள்ளனர். புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் சீடர்களிடம் ‘தில்’ இருக்கும். அவர்கள் ஒருநாள் மனம் திருந்தி வருவார்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை மீட்டெடுத்து வழிநடத்தி செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இவர் தன்னை சின்ன எம்.ஜி.ஆர். எனக் கூறி கொண்டு தமிழகம் முழுவதும் தனக்கென ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு கார்டனுக்கு எதிராக செயல்பட்டார். எல்லோரையும் சின்ன எம்.ஜி.ஆர். என்றே அழைக்க சொன்னார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போலவே சில ஆண்டுகளாக பாஸ்கரன் தன்னை தலைவன் என கூறி கொண்டு சினிமாவில் கதாநாயகனா நடிக்க தொடங்கினார். படத்துக்கு தலைவன் என தலைப்பும் வைக்க, கார்டன் இவர் மீது கடும் கோபம் அடைந்தது. என்பது குடிப்பிடதக்கது.