பேனர், கட் அவுட் வைக்க கட்டுப்பாடு... தமிழக அரசு மேல்முறையீடு..! அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஹைகோர்ட்!
கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு உயர்நீதிமன்ற தனிநீதிபதி விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்ஷன குமாரி என்ற பெண், அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக்கோரி வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த பெண் வீட்டின் முன் இருந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டது. மேலும் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ வைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள் கட் அவுட்கள் வைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
பேனர் வைத்து மட்டுமே தங்களை விளம்பரத்திக்கொண்ட ஆட்சியாளர்களால் நீதிமன்ற உத்தரவை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதால் பேனர்கள் வைப்பதை ஆட்சியாளர்களால் தவிர்க்க முடியவில்லை.
எனவே உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பேனர்கள் வைக்கப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள் சத்யநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் முறையிடப்பட்டது. மேல்முறையீட்டுமனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் அரசின் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு பட்டியலின்படி நாளைதான் விசாரிக்கப்படும் என தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி திருச்சியில் பழனிசாமி, பன்னீர்செல்வம் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களையும் அவர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கட் அவுட்களையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில், திருச்சியில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பேனர்கள், கட் அவுட்கள் விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.