இனி இந்த பழக்கம் எல்லாம் இருக்கக்கூடாது... அமைச்சர்களுக்கு கடுமையான உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்?
பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்த அந்த துறைகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவது, வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறைகள் கடந்த காலங்களில் இருந்தன.
மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கி இருக்கும் நிலையில் சிக்கன நடவடிக்கையாக முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாணி, பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் நடைமுறைகளை கைவிடுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்த அந்த துறைகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவது, வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறைகள் கடந்த காலங்களில் இருந்தன.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்தர சூட்கேஸ்கள், டிராலி பேக், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்குப்படுவது வழக்கம். சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள், காவல்துறையினர் என ஒரு நாளைக்கு சுமார் 1000 பேருக்கு உணவு வழங்குவதற்காக அந்த அந்த அரசு துறைகளில் இருந்து சுமார் 3 லட்சம் செலவிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு செலவு செய்வதற்கு அரசு துறைகளின் பட்ஜெட்டில் எந்த அனுமதியும் கிடையாது. இந்த நிலையில் முதல்முறையாக சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விதமாக இந்த நடைமுறையை கைவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அந்த துறை தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவை சொந்த செலவில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் அல்லது சட்டப்பேரவை கேண்டினில் உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.