விவசாயசங்கங்கள் காவிரி மேலாண்மை விஷயத்தில் மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து 17,18 தேதிகளில் 48 மணி நேர தொடர் ரெயில் மறியல் நடத்த தீர்மானித்து அனைத்து கட்சிகளின் ஆதரவை கேட்டனர்.

இதில் அதிமுக , பாஜக , தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. ஆவேசமாக ரயில் மறியலில் ஈடுபட்டனர்.பெரம்பூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , சென்ட்ரலில் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் , பேசின் பாலத்தில் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

சைதாப்பேட்டையில் மா.சுப்ரமணியம் தலைமையில் நடந்த மறியலில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். திமுக சார்பில் அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆவேசமாக தமிழக மாவட்டங்களில் மறியல் போரில் ஈடுபட்டனர்.
ஆனால் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மகளிர் அணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. சென்னையில் கனிமொழி இருந்தும் அவர் போராட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த செப்.23 போராட்டத்தின் போது சென்னையில் கனிமொழி தலைமையில் அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அன்று போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்படாத மு.க.ஸ்டாலின் திடீரென எழும்பூரில் நடந்த போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனாலும் கனிமொழி தலைமையில் நடந்த அண்ணாசாலை சாலை மறியல் அதிக அளவு தொண்டர்களுடன் பெரிதாக கவர் ஆனது.

இதனால் மு.க.ஸ்டாலின் கோபப்பட்டதாக தெரிகிறது. மறுநாள் கனிமொழியின் போராட்ட செய்திகள் அந்த அளவுக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த போராட்டத்துக்கு கனிமொழிக்கு கலந்துகொள்ள கூடாது என தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் சென்னையில் இருந்தாலும் கனிமொழி கோபலபுரம் இல்லத்திலேயே முடங்கி கிடந்தார்.
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் போராட்டத்தில் கலந்துகொண்டால் அது டெல்லி அரசால் கவனிக்கப்படும் என்ற போதிலும் கனிமொழிக்கு போடப்பட்ட தடை போராட்ட களத்திலும் கோஷ்டி அரசியலின் வெளிப்பாடு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இன்று நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் கனிமொழி டெல்லி கிளம்பி சென்றார்.
