தண்ணீர் தரலைன்னா ஆட்சிய கலையுங்க...! அய்யாக்கண்ணு ஆவேசம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்றும், இந்த தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு இன்று காலை 10.45 மணிக்கு மூன்றாவது வழக்காக விசாரணைக்கு வந்தது ஆறு வாரங்களுக்குள் மே 3 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில் கர்நாடகத் தேர்தலைக் காரணம்காட்டி மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டது மத்திய அரசு.
காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டு மத்திய அரசு இடைக்கால மனு ஒன்றை நேற்று (மே 2) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வரும் 16 ஆம் தேதி வரை அவகாசம் கோரிய இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரணை செய்யும்படியும் தலைமை நீதிபதி அமர்வின் முன்பு மத்திய அரசு முறையிட்டது. ஆனால், அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நாளை காவிரி தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (மே 3) மூன்றாவது வழக்காக இன்று காலை 10.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு அமைச்சரும் பிரதமரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார கால அவகாசம் தேவையென வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கோரிக்கையை வைத்தது.
இதற்கு உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு மே மாதத்துக்குள் 4 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்; இல்லையெனில் கடும் விளைவுகளை கர்நாடாக சந்திக்க நேரிடும் என அதிரடியான தீர்ப்பை வழங்கி வழக்கை மே 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விளை நிலங்களுக்கு இது போதுமானது இல்லையென விவசாயிகள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கும் அளவுக்கு நீர் இருப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் தர உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று விவசாய சங்க த லைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் வழங்க வேண்டும். அப்படி உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.