ஆடிட்டர் குரு மூர்த்தி வீடு முற்றுகை போரட்டம்.. த.பெ.தி.க அறிவிப்பு.. பெண்களை இழிவு படுத்தியதாக புகார்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கியிருக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை ஆடிட்டர் குருமூர்த்தி கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவரின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கியிருக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை ஆடிட்டர் குருமூர்த்தி கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவரின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது. பேருந்து பயண திட்டம் பெண்களை பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டது என கூறி தமிழ் பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய குருமூர்த்தியின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அப்படியான ஒரு திட்டம் தான் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் திட்டம். இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பாராட்டையும் பெற்றுள்ளது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் இலவசமாக பயணிக்க முடிகிறது. இதன்மூலம் மாதம் 1000 முதல் 2000 ரூபாய் அளவிற்கு அவர்களின் செலவு குறைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துக்ளக் இதழில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் அந்த இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதில், இப்போது ஆட்சி செய்கிற திமுக அரசு பேருந்தில் பெண்கள் காசின்றி பயணித்தால் அது ஓசியில் பயணம் தான், இதுதாட்
திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார்.குருமூர்த்தி பேச்சு. அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை அறிவித்து பெண்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்திருக்கிறது இந்த அரசு என அரசை விமர்சித்தார். குருமூர்த்தியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை கொச்சைப்படுத்தி ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் முதல் ஐந்து திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதில் ஒன்று அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா இலவச பயணம், அது உடனடியாக நடைமுறைக்கு வந்து லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஏழை எளிய, உழைக்கும் பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செலவு குறைகிறது, தமிழக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால் இந்தத் திட்டத்தை கொச்சைப்படுத்தி துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி இலவச பேருந்து பயணத்தை கொடுத்து ஸ்டாலின் அரசு பெண்களை பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டது என்று பேசி தமிழக பெண்களை கொச்சைப்படுத்தி உள்ளார் . குருமூர்த்தியின் இந்தப் பேச்சைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணியினர் 20.05.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு குருமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு கு.ராமகிருஷ்ணன் (பொதுச்செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்) இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.