ஒரே நாடு - ஒரே மொழி என்ற பாசிசத்தை திணிக்க முயற்சி... உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது திருமாவளவன் ஆவேசம்!
"ஆங்கிலம் அந்நிய மொழி என்னும் வாதங்களை முன்வைத்து, அப்பாவி மக்களை ஏய்க்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மக்கள் விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.”
ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி அமித்ஷாவின் கருத்து என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவுக்கு எதிர்வினை
“அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும்” என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று கூறிய கருத்து அரசியல் ரீதியாக பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. இந்தி மொழிக்கு ஆதரவான அவருடைய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பை அமித்ஷாவுக்கு எதிராகத் தெரிவித்திருக்கிறார். இதேபோல இந்தி மொழித் திணிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்திலும் எதிர்வினைகள் ஆற்றத் தொடங்கியிருக்கின்றன அரசியல் கட்சிகள்.
பிறமொழி பேசுவோர் அதிகம்
அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். இக்கட்சிகளின் வரிசையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய அலுவல் மொழிகள் 22. இந்தி அவற்றுள் ஒன்று. இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையைவிட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
பாசிசப் போக்கு
ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன் நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாக உள்ளனர். எனவேதான் அமித்ஷா இப்படி பேசிகிறார். அமித்ஷாவின் இந்தக் கருத்துப் புதியதல்ல. ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி. ஆங்கிலம் அந்நிய மொழி என்னும் வாதங்களை முன்வைத்து, அப்பாவி மக்களை ஏய்க்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மக்கள் விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.