பெங்களூரு சிறை கைதிகள் மீது நள்ளிரவில் கொடூர தாக்குதல்……கசிந்த பரபரப்பு தகவல்கள்…
பெங்களூரு சிறை கைதிகள் மீது நள்ளிரவில் கொடூர தாக்குதல்……கசிந்த பரபரப்பு தகவல்கள்…
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு நடத்திய பின்பு, நள்ளிரவு கைதிகள் மீது நடந்த கொடூர தாக்குதல் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து, ‘கன்னட பிரபா' பத்திரிகைக்கு, பாதிக்கப்பட்ட கைதிகள் சிலர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
ஜூலை, 16-ம் தேதி அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார். அவரிடம் நாங்கள் பல புகார்களை தெரிவித்தோம்.
பல ஆண்டுகளாக நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், பரோலில் விடுவிக்க தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மறுக்கிறார்.
மற்ற அதிகாரிகள் எங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர் என்று ரூபாவிடம் தெரிவித்தோம். ஆனால், அவரிடம் பேசவிடாமல், எங்களை கிருஷ்ணகுமார் தடுத்தார். சிறையில் எல்லாம் முறையாக நடப்பதாக கூறினார்.
சிறையை விட்டு ரூபா சென்ற உடன் சில கைதிகள் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கைதிகள் எதிர் குரல் கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது சிறை போலீசார் தடியடி நடத்தி எங்களை கலைந்து போக செய்தனர். அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று நினைத்தோம்.
ஆனால், அன்று நள்ளிரவு அதிகாரிகள் கிருஷ்ணகுமார், கே.சுரேஷ், மாதவ் நாயக், ஜெயிலர்கள் மேதி, மோகன், பாட்டீல் கதிமணி ஆகியோர் நாங்கள் தங்கி இருந்த சிறை அறைக்குள் வந்தனர்.
அனைவரும் மது அருந்திய நிலையில் இருந்தனர்.
ரூபாவிடம் புகார் தெரிவித்த கைதிகளை ஒருவர் பின் ஒருவராக வெளியே இழுத்து போட்டு கடுமையாக தாக்கினர்.
நாங்கள் கதறி அழுதும் எந்த பலனும் இல்லை. மிருக வெறியுடன் தாக்கி எங்களை தரை மீது தூக்கி போட்டனர். 32 கைதிகள் இது போல் தாக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் எங்கள் உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படாமல், பிற சிறைகளுக்கு மாற்றப்பட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.