ஏடிஎம் கொள்ளையில் திடீர் திருப்பம்.. ஹரியானாவில் ஒருவரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.
சென்னையில் பல்வேறு இடங்களில் எஸ்பிஐ ஏடிஎம்-ல் நடந்த நூதன கொள்ளையில் தொடர்புடைய நபரை தனிப்படை போலீசார் ஹரியானாவில் வைத்து கைது செய்துள்ளனர்
சென்னையில் பல்வேறு இடங்களில் எஸ்பிஐ ஏடிஎம்-ல் நடந்த நூதன கொள்ளையில் தொடர்புடைய நபரை தனிப்படை போலீசார் ஹரியானாவில் வைத்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் போன்ற எஸ்.பி.ஐ வங்கிக் கிளை மேலாளகள் மூலம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் வடபழனி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட வங்கி கிளைகளிலும் மோசடி நடந்திருப்பதாக புகார்க்ள வந்துள்ளது.
இந்த நூதன கொலையானது கேஷ் டெபாசிட் இயந்திரங்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை பயன்படுத்தி அரங்கேற்றப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 48 லட்சம் ரூபாய் அளவிற்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, கொள்ளையர்கள் இதே பாணியில் வேலூரிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இது குறித்து அடுத்தடுத்த வந்த புகாரால் சுதாரித்துக் கொண்ட போலீசார், கொள்ளையர்கள் சென்னையை விட்டு தப்பியிருக்கக்கூடும் என்ற அடிப்படையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். 3 நாட்கள் தங்கியிருந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் கொள்ளையர்கள் வட மாநிலத்தவராக இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கொள்ளையர்கள் எஸ்பிஐ வங்கியில் கைவரிசையை காட்டியதால் நாடு முழுவதும் சிடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. போலீசார் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், கொள்ளை கும்பல் டெல்லியில் கைவரிசையை காட்டியதும், பின்னர் ஹரியானாவிற்கு தப்பியோடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் ஹரியானா விரைந்தனர், அங்கு ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். அந்த நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் மூவரை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.