அத்திக்கடவு - அவிநாசி திட்டம் எப்போது நிறைவடையும்?... பேரவையில் வெளியான அதிரடி அறிவிப்பு...!
அத்திகடவு - அவிநாசி திட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2021 - 22ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் நீர்பாசன துறைக்காக ரூ.6,453 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் முக்கிய நீர்பாசன திட்டங்கள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கரூர் அருகே புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. கல்லணை கால்வாய் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடக்கப்படும் என்றும், சரபங்கா நீரேற்று திட்டம் விரைவில் நிறைவடையும் என்றும் தெரிவித்தார். தாமிரபரணி, கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் அடுத்த மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்றும், அத்திகடவு - அவிநாசி திட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய நிதி அமைச்சர் ஓ.பி.எஸ்., 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும். குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ரூ3,016 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.