விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்! விவேக் ஜெயராமன் வைத்த டுவிஸ்ட்
ஜெ. மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை முடிவில் உண்மை வெளியே வரும் என்று இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹாலில் ஆறுமுகசாமி விசாரணையைத் துவங்கி நடத்தி வருகிறார்.
இந்த விசாரணை ஆணையத்தில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என பல்வேறு தரப்பினரும் நேரில் ஆஜராகி தங்களின் வாக்குமூலங்களை அளித்து வருகின்றனர். அவர்களது வாக்குமூலங்களும், பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
ஜெயா தொலைக்காட்சியி சிஇஓ, கடந்த மாதம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு விவேக்கிற்கு, மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த வகையில் விவேக், இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார்.
இன்றைய விசாரணையில், ஜெயலலிதா போயஸ் கார்டனில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உடனிருந்தவர்கள் யார்? செப்டம்பர் 22 ஆம் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? ஜெயலலிதாவை எத்தனை முறை சென்று பார்த்து வந்தீர்கள்? மருத்துவமனையில் உடனிருந்தவர்கள் யார் யார்? என்பது குறித்த கேள்விகள் கேட்டதாக தெரிகிறது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக விவேக்கிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக், விசாரணை நடைபெற்று வரும்போது வெளிப்படையாக எதையும் கூற முடியாது என்ற அவர், விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும் என்று கூறி சென்றார்.